districts

img

லாரி கவிழ்ந்து குழந்தை பலி:  சிபிஎம் போராட்டத்தால் இழப்பீடு

சிதம்பரம், ஜூலை 15- சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிக்காக கனரக வாகனங்களில் மண் எடுத்துச் செல்கின்றனர். எள்ளேரி கிழக்கு கிராம பேருந்து நிறுத்தம் அருகே ஒரு லாரி சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் லாரியை ஓரங்கட்ட முயற்சி செய்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரத்தில் பாலசுப்பிரமணியன் என்பரது குடிசை வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது.  இந்த இடுபாடுகளில் சிக்கியவர்களின் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர்.   இதில் அஜித்குமாரின் 10 மாத குழந்தை அஸ்விதா உடல் நசுங்கி உயிரிழந்தார்.  மேலும் பாலசுப்பிரமணியன் (58) ஆதவன்  மனைவி பிரிய தர்ஷினி,  பாண்டியன் உள்ளிட்ட 7  பேர் மீட்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் வருவாய்த் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில்  குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டனர்,  விடுதலைசிறுத்தைகள் கட்சி விவசாய அணி பசுமைவளவன், துணைபொதுசெயலாளர் கண்ணன், சிபிஎம் நகர்குழு உறுப்பினர் மணிகண்டன், வட்டக்குழு உறுப்பினர் பொன்னம்பலம் விவசாய சங்க வட்ட செயலாளர் ஜாகிர்உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.